நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள தர்மஸ்தலா விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் பெயர் சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு விரைவில் விளக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் சூழலில், தனது நிலைப்பாட்டை நேரடியாக தெரிவிப்பேன் என்று அவர் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ்., “அனைவருக்கும் வணக்கம். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக என்னைப் பற்றிய சில செய்திகள் விவாதிக்கப்படுவது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம் என்பதாலும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய விவகாரம் என்பதாலும், இது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது எனது கடமையாகும்.
நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன்; இன்னும் இரண்டு நாட்களில் நேரில் வந்து ஊடக நண்பர்கள் வாயிலாகப் பதிலளிப்பேன். அதுவரை, சில விஷமிகள் இச்செய்தியுடன் தேவையற்ற வதந்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையும் இணைத்துப் பரப்புவதை, நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் அளித்த புகாரில், ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு கோயில் நிலப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சின்னையா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியும் மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திர ஹெக்கடேவுக்கு எதிராக அவதூறு பரப்ப சிலர் தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், தனது பங்கை சரியாக நிறைவேற்றினால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என மகேஷ் ஷெட்டி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே மனுவில் “பிரகாஷ் ராஜ்” என்ற பெயர் இடம்பெற்றிருப்பதால், அது நடிகர் பிரகாஷ் ராஜையே குறிக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான், விரைவில் நேரடியாக விளக்கமளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 13 பெண்களை சீரழித்த பாப் பாடகர் கைது!? குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் பேட்ரிக் புரூயல்!?