1958- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ஒடிசாவில் பிறந்தவர் திரௌபதி முர்மு. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1997ம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து 2002ம் ஆண்டு ராய்ரங்க்ப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருந்த போது, இரண்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், இரண்டு ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து 2015ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார். தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவரானார். இதன்மூலம், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையும் படிங்க: சர்ச்சை கீழடி... திமுக மேல எந்த தப்பும் இல்ல! அதிமுக, பாஜகவை சாடிய எம்எல்ஏ எழிலன்!
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, டேராடூனில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தை (NIEPVD) பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் தனக்காக பிறந்தநாள் பாடலைப் பாடியபோது உணர்ச்சிவசப்பட்ட திரௌபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கி அழுதார்.
பின்னர் பேசிய அவர், "என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. அவர்கள் மிகவும் அழகாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் மனதிலிருந்து பாடுகிறார்கள்.

அவர்களின் திறமை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சில சிறப்புத் திறன்களுடன் பிறக்கிறார்கள் என்ற எனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவர்களின் வெற்றி நிச்சயம். அவர்கள் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
அரசின் கொள்கைகள் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் வளர சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி குழந்தைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!