மத்திய அரசு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திசையில் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. கடந்த காலங்களில் வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசைகள் நிலவியதைப் போலவே, ரேஷன் கடைகளிலும் காத்திருப்பு, அளவு குறைவு, தரம் குறைந்த பொருட்கள், முறைகேடுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்தன. இவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், ஏ.டி.எம். போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனை குஜராத் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. அங்கு சில மாவட்டங்களில் (அகமதாபாத், சூரத், ஆனந்த், வல்சாட் உள்ளிட்டவை) இது செயல்படுத்தப்பட்டு, மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கும் உணவுப் பொருட்களுக்கான டிஜிட்டல் கூப்பன் அல்லது டோக்கன், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!
இதைப் பயன்படுத்தி, அவர்கள் ரேஷன் கடைக்குச் சென்று தங்கள் உரிமையான அரிசி, கோதுமை போன்றவற்றைப் பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக 'அன்னபூர்ணா' (அல்லது அன்னபுர்த்தி) என்ற தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தைப் போன்று செயல்படும். இதில் ரேஷன் பொருட்கள் 5 கிலோ அளவிலான பாக்கெட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
பயனாளிகள் கண் கருவிழி ஸ்கேன், விரல் ரேகை பதிவு அல்லது கியூஆர் கோடு ஸ்கேன் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, பொருட்களைப் பெறலாம். இயந்திரம் வெறும் 35 விநாடிகளில் 25 கிலோ வரை தானியங்களைத் துல்லியமாக வழங்கும் வசதி கொண்டது. சில இடங்களில் இது 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உணவுத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “குஜராத்தில் தொடங்கிய இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயந்திரத்தில் 5 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறை மூலம் தரம், அளவு துல்லியம், வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
இதனால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு இடத்திலும் 2 அல்லது 3 அன்னபூர்ணா இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் யார் பொருட்கள் வாங்குகிறார்கள், யார் வாங்கவில்லை என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். அனைத்து செயல்பாடுகளும் கணினி மூலம் பதிவாகும் என்பதால் ஊழல் வாய்ப்புகள் இல்லாமல் போகும்” என்றார்.

தற்போது குஜராத்தில் சோதனை அடிப்படையில் நடைபெறும் இத்திட்டம், விரைவில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாகும். இதன்மூலம் ரேஷன் விநியோகத்தில் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!