கேரளா: தென்மேற்கு பருவமழை கடந்த 4-ம் தேதி தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்று காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (7-ம் தேதி) வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 8-ம் தேதியும் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கும்.

கேரள கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானிலை மையத்தின் கணிப்பை தப்பாக்கிய 'எல் நினோ'! கேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!
தொடர்ச்சியான மழை காரணமாக வாகன விபத்துக்கள், மரம் சாய்வு மற்றும் மின் விபத்துக்களில் மாநிலம் முழுவதும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றன. மழை பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தயார் நிலையில் உள்ளன. கேரள மக்கள் அனைவரும் அரசின் எச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 5 வரை கொட்டப்போகும் கனமழை! ஆரஞ்ச், எல்லோ அலர்ட்டால் திணறும் கேரளா!