இந்தியாவின் 77வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26, 2026) டெல்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்புடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக, பாரம்பரிய வழக்கப்படி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வீரர்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வந்தனர். பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார்.
காலை 10:30 மணிக்கு தொடங்கிய அணிவகுப்பில், குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு எம்ஐ-17வி ஹெலிகாப்டர்கள் விழா பகுதியின் மேல் பறந்து, தேசியக் கொடி மீதும் பார்வையாளர்கள் மீதும் மலர்த்தூவி சென்றன. லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!! டெல்லியில் துவங்கியது கோலாகல குடியரசு திருநாள்!!
பரம வீர சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ், சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் ஜெனரல் சி.ஏ. பிதவாலியா, கர்னல் டி. ஸ்ரீராம் உள்ளிட்ட வீர திர செயல்களுக்காக உயரிய விருதுகள் பெற்றோர் அணிவகுத்துச் சென்றனர். ஐரோப்பிய யூனியன் ராணுவ வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்தின் படை வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ஜுன் டாங்கி, கவச வாகனங்கள், பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூர்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சர், நாக் ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அணிவகுத்துச் சென்றன. அதைத் தொடர்ந்து 30 கலாசார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசார ஊர்திகளும், 13 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஊர்திகளும் இடம்பெற்றன. 2,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
சிஆர்பிஎஃப், எஸ்எஸ்பி படைகளைச் சேர்ந்த வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து காட்டினர். இந்திய விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாடு முழுவதும் குடியரசு தின விழா பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, பன்முகத்தன்மை ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! குவாலிட்டி தான் முக்கியம் இப்போ!! மனதின் குரலில் மோடி கொடுத்த அட்வைஸ்!