ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நட்வர்லால் ஷர்தா 2008இல் தொடங்கிய 'கன்ஹா குரூப்' நிறுவனம் உணவு, இனிப்பு, பேக்கரி பொருட்களை விற்பனை செய்து பெரும் புகழ் பெற்றது. ஆனால் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த 18ஆம் தேதி முதல் ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்ரீகங்காநகர், கோட்டா, கரவுலி, ஹிந்தவுன் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகள், உணவகங்கள், அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஜெய்ப்பூரில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்தது. நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்து, அதை ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தாஜ் மற்றும் குந்தன்வான் ஹோட்டல்களிலும் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

சோதனையின் மூன்றாம் நாளான நேற்று (பிப்.20) நட்வர்லால் ஷர்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடந்தது. அப்போது ஒரு ரகசிய அறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கட்டப்பட்ட சுவரை அதிகாரிகள் இடித்தனர்.
உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு முழு சோதனைக்குப் பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கன்ஹா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட வங்கி லாக்கர்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த லாக்கர்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்கம், வைரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனை நடந்தாலும் உணவகங்களில் வணிகம் தடையின்றி நடைபெற்றது. வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்த சோதனை ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு, மறைத்த சொத்துகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பல அதிரடி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எந்தெந்த தொகுதிகள்? திமுகவிடம் தேமுதிக உத்தேச பட்டியல் கொடுத்ததாக தகவல்..!!