சபரிமலை அய்யப்பன் கோயிலின் புனிதமான தங்க கவசங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரளா உயர் நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், இது மிக நுட்பமான வழக்கு என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும், வழக்கை தீவிரமாக கண்காணிப்பதாகவும் ஐகோர்ட் உறுதியளித்துள்ளது.
2019-ம் ஆண்டு சபரிமலை கோயிலின் சன்னிதான முகப்பில் உள்ள துவார பாலகர் சிலை மற்றும் கதவு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பராமரிப்புக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோது, அதில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரை அடுத்து கேரளா உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
விசாரணையில் திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் அதிகாரிகளான உன்னிகிருஷ்ணன் போற்றி, முராரி பாபு, சுதீஷ் குமார், முன்னாள் தலைவர் வாசு, முன்னாள் எம்எல்ஏ பத்மகுமார், சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உள்ளிட்ட 12 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அமலாக்கத்துறையும் இதில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டில் புதிய திருப்பம்!! முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் அதிரடி கைது! பரபரப்பு!

இந்நிலையில் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்பட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ராஜா விஜயராகவன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது நீதிமன்றம் தெளிவாகக் கூறியது: “இந்த வழக்கு மிக நுட்பமானது. சிறப்பு விசாரணை குழு சரியான திசையில் முன்னேறி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறிது காலம் ஆகலாம், ஆனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. ஐகோர்ட் சார்பில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.”
இந்த தீர்ப்பு சபரிமலை பக்தர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தங்க கொள்ளை வழக்கு தொடர்பாக பல ஆண்டுகளாக எழுந்த சந்தேகங்களுக்கு இப்போது நீதிமன்றம் தெளிவான பதிலை அளித்துள்ளது. விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தற்போது உறுதி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை கோயிலில் இருந்து மேலும் தங்கத்தை திருட சதி! ஆதாரங்களை அழிக்க முயற்சி! SIT அறிக்கையில் பகீர்!!