சபரிமலை அய்யப்பன் கோயிலில் கடந்த 2025-26 மகர விளக்கு சீசனில் பூசாரிகள், உதவி பூசாரிகள், தினக்கூலி ஊழியர்கள், குத்தகைதாரர்கள் உள்ளிட்டோர் லஞ்சம், முறைகேடுகள் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வங்கிக் கணக்குகள் வழியாக பரிமாற்றம் செய்துள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் நியமித்த தனி அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையின்படி, சபரிமலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனலட்சுமி வங்கிக் கிளைகள் வழியாக பெருமளவு சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
ஸ்டேட் பேங்க் வழியாக மட்டும் 1,667 பரிவர்த்தனைகள் மூலம் 8.08 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. தனலட்சுமி வங்கி வழியாக 942 பரிவர்த்தனைகள் மூலம் 11.45 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 18 கணக்குகள் மூலம் இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமானது சபரிமலை தங்கம் விவகாரம்! கேரள சட்டசபையில் கடும் அமளி!! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

நெய் விற்பனை முறைகேடு, பக்தர்களுக்கு தரிசன உதவி செய்து பணம் பெறுதல், தேவைக்கு அதிக தினக்கூலி ஊழியர்களை நியமித்தல் போன்ற முறைகேடுகள் மூலம் இந்த பணம் சேர்க்கப்பட்டதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது. சிலர் தினக்கூலி ஊழியர்களாக வேலைக்கு வந்து லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. தபால் நிலையம் வழியாகவும் 14.08 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கக் கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு கோயிலில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு அஞ்சி, ஊழியர்கள் பணத்தை கையில் வைத்திராமல் வங்கி மூலம் பலரது கணக்குகளுக்கு அனுப்பியதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
தினக்கூலி ஊழியர்கள் நியமனம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை திருவிழா நடைபெறும் போது ஏற்படும் முறைகேடுகள் குறித்து மக்களிடையே கடும் கோபம் எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் காவல்துறை விசாரணை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!