புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி (நாதக) தனது அதிரடித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
பாரதிதாசன் பிறந்த இந்த வீரம் விளைந்த மண்ணில், ஒரு புதிய மாற்று அரசியலுக்கான முயற்சியை நாம் தமிழர் கட்சி எடுத்துள்ளது. இது வெறும் தேர்தல் அல்ல, ஒரு சமூகப் புரட்சி" என சீமான் குறிப்பிட்டார்.
மற்ற அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறது. நாங்கள் தேர்தலுக்காக வரவில்லை, தலைமுறை மாற்றத்திற்காக வந்திருக்கிறோம் என அவர் முழங்கினார்.
இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!

திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடிய சீமான், எல்லாவற்றுக்கும் இலவசம், இலவசம் என்று அறிவிப்பது வளர்ச்சித் திட்டம் அல்ல; அது ஒரு நாட்டின் வீழ்ச்சித் திட்டம். நாங்கள் மக்களுக்குத் தூண்டிலைத் தருவோமே தவிர, மீனைத் தர மாட்டோம் எனத் தெரிவித்தார்.
28 தொகுதிகளிலும் சரிபாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் கொள்கை பிடிப்புள்ள இளைய தலைமுறையினரை வேட்பாளர்களாகச் சீமான் மேடையில் அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, காரைக்குடியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த சீமான், இன்று புதுச்சேரி வேட்பாளர்களையும் களமிறக்கித் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நாளை திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார் சீமான்! சொந்த தொகுதியில் போட்டி!