புது டெல்லி, டிசம்பர் 13: இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக பதிவாகி உள்ளது. இதனால் பனிமூட்டம் அதிகரித்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, வட இந்தியாவில் வீசும் குளிர் காற்று மத்திய மஹாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று (டிசம்பர் 13) வரை நீடிக்கும். தெலங்கானா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் நாளை (டிசம்பர் 14) வரை குளிர் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை உறைபனி நிலைக்கு கீழே சரிந்துள்ளது. குப்வாரா பகுதியில் மைனஸ் 3.6 டிகிரி செல்ஷியஸ், பஹல்காம் பகுதியில் மைனஸ் 4.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காற்று காரணமாக, ரோஹ்தாங் பாஸ், குலு மாவட்டத்தின் டார்ச்சா பகுதிக்கு செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலத்திலும் கடும் குளிர் காற்று வீசி வருகிறது.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் வெப்பநிலை இதைவிட குறையும் என்று ஐஎம்டி எதிர்பார்க்கிறது. ஒடிஷா மாநிலத்தின் அனுகுல், சுந்தர்கர், கேந்திரபாரா, கலஹண்டி, கோராபுட் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸுக்கு கீழே பதிவாகியுள்ளது. இந்த நிலை நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர் அலை போலார் வோர்டெக்ஸ் மற்றும் லா நினா நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் பனிமூட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குளிர் நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்! இனி மக்கள் தெளிவா முடிவெடுப்பாங்க! அண்ணாமலை சூட்சமம்!