கேரளத்தில் மூன்றரை நாட்களில் பாம்பு கடிக்கு ஆறு பேர் உயிரிழந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கே ஒரே வாரத்தில் 60 பேர் பாம்பு கடிக்கு ஆளாகி இருப்பதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழியை காதால் கேட்டு வளர்ந்தவர்களுக்கு காட்சியாகவே காட்டி இருக்கிறது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்த சம்பவம். தைக்காடு காவலர் பயிற்சி கல்லூரியில் காவலர்கள் வழக்கமான அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாரை பாம்பு ஒன்று அங்கு வரவே அதனை பார்த்த அனைவரும் மரண பயத்தில் பதறி ஓடி இருக்கின்றனர்.
நாடு முழுவதும் கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில் கேரளத்தில் இயல்பை விட மூன்று முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கிறது. கேரளம் மலையும் மலை சார்ந்த இடம் என்பதோடு மரங்கள் அடர்ந்து பசுமை சூழ்ந்திருக்கும் பகுதி என்பதால் பாம்புகள் அதிகம் இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கவே பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.
இதையும் படிங்க: லயோலா வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது இதுதான்..! வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...! எச்சரிக்கை..!
திருச்சூரில் தூக்கத்தில் இருந்தபோது கட்டுவிரியன் கடித்து எட்டு வயது சிறுவன் உயிரிழந்துவிட்டார். அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாம்பு கடித்து ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களில் 60 பேரை பாம்பு கடித்திருக்கிறது. வாகனங்கள், கிணறு, வீடு என எல்லா இடங்களுக்கும் பாம்புகள் படையெடுத்து குலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கேரளத்தில் எங்கு திரும்பினாலும் பாம்புகள் படையெடுத்துக் கொண்டிருப்பதை காட்டும் விதவிதமான ரீல்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன. பாம்பு கடி நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அம் மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது.
வீட்டின் சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு பாம்பு கடித்துவிட்டால் பாரம்பரிய கை வைத்தியம் செய்யாமல் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருக்கும் மருத்துவமனைகளுக்கு விரையும் படியும் கேரள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் வீட்டு கொள்ளையில் டுவிஸ்ட்.. மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட மருமகள்... ரகசிய காதலுடன் கைது...!