சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில், விற்பனைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் நவீன ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் இயந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் காடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட சூழலியல் மண்டலங்களில் மது பாட்டில்கள் வீசி எறியப்படுவதைத் தடுப்பதற்காக மலைப்பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்டங்களில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற்று ரூ.10 வழங்கும் திட்டம் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களே காலி பாட்டில்களை நேரடியாக வாங்கிப் பணத்தைத் திருப்பித் தரும் நடைமுறையால் அவர்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் விற்பனை நேரங்களில் கூட்ட நெரிசலும் பணப்பரிவர்த்தனையில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இதனைக் களையும் வகையில், பொதுமக்கள் காலி பாட்டில்களைத் தாங்களே எளிதாக வழங்கி உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் நவீன 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' இயந்திரங்களைக் கடைகளின் முகப்பில் நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நவீன இயந்திரங்களை நிறுவும் நடைமுறைகளையும் டெண்டர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!