காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை பொறுக்க முடியாத பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ நிலைகள், அப்பாவி மக்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிப்பதோடு, பாகிஸ்தானில் புகுந்து பதில் தாக்குதலும் நடத்தி வருகிறது இந்தியா. இதன் தொடர்ச்சியாக இரவோடு இரவோ இந்தியாவின் 26 நகரங்களை குறி வைத்து குண்டுகளுடன் கொத்து கொத்தாக ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்.

இலக்கை அடையும் முன் நடுவானிலேயே இந்தியா சுட்டு வீழ்த்த ஆரம்பித்தது.பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் மக்களை குறிவைத்து கொத்து கொத்தாக ட்ரோன்கள் வந்தன. அனைத்தையும் நம் ராணுவ வீரர்கள் வானிலேயே இடைமறித்து அழித்தனர். இந்த தாக்குதலுக்கு துருக்கி கொடுத்த YIHA III ரக ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது தெரியவந்தது. சுட்டு பொசுக்கிய ட்ரோன் காட்சிகளை வெளியிட்டு, குடியிருப்பு பகுதியை பாகிஸ்தான் குறி வைத்ததற்கான ஆதாரத்தை இந்தியா காட்டியது.
இதையும் படிங்க: புருஷனை கொல்லுறப்போ கைகட்டியா நிப்பீங்க! பெண்களுக்கு வீரமே இல்லை! பாஜ எம்.பி சர்ச்சை பேச்சு..!
பாகிஸ்தானுக்கு துருக்கி என்னென்ன வகையில் எல்லாம் உதவி செய்தது என்பதை நம் உளவுத்துறை மோப்பம் பிடித்தது. வர்த்தக ரீதியில் துருக்கிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்க துவங்கியது. கூடவே, போர் பற்றி விளக்கம் அளிக்கவும், பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானை உலக அரங்கில் அம்பலப்படுத்தவும் அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுக்களை 33 நாடுகளுக்கு நம் அரசு அனுப்பி வைத்தது.

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பிரதமரோ துருக்கிக்கு நன்றி சொல்ல அந்த நாட்டுக்கு பறந்து இருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல்லில் அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சந்தித்தார். இந்தியாவுக்கு எதிரான போரில் தங்களுக்கு நேரடியாக உதவி செய்ததற்கு நன்றி கூறினார். வர்த்தகம், பாதுகாப்பு, உளவுத்தகவல் பரிமாற்றம் செய்வது தொடர்பாக துருக்கியும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்த சந்திப்புக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர், ‛இஸ்தான்புல்லில் எனது பாசத்துக்குரிய சகோதரர் அதிபர் எர்டோகனை சந்தித்தது பெருமையாக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த வலுவான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்’ என்று கூறி உள்ளார். ஷெபாஷ் ஷெரீப், எர்டோகன் சந்திப்பின் போது ராணுவம் சார்ந்த பல விஷயங்களை அலசி இருக்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை பரிமாற்றம் செய்யும் முக்கிய உறுதியை துருக்கி கொடுத்து இருக்கிறது.

எப்படி ராணுவ பலத்தில் இந்தியாவின் பக்கத்தில் பாகிஸ்தானால் வர முடியாதோ, அதை போல் உளவு அமைப்பு வலிமையிலும் இந்தியாவை பாகிஸ்தானால் நெருங்க முடியவில்லை. எனவே தான் துருக்கியிடம் உதவி கேட்டு கையேந்தி இருக்கிறது பாகிஸ்தான். ஷெபாஷ் ஷெரீபுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு துருக்கியும் ஒரு அறிக்கை வெளியிட்டது. ராணுவம், பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பாகிஸ்தானுடன் இணைந்து இன்னும் தீவிரமாக செயல்படுவோம் என்று கூறியது.
துருக்கி அதிபர் ஏர்டோகனும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்களில் பல முக்கியமான விஷயங்களை பாகிஸ்தானுடன் விவாதித்தோம். ஒவ்வொரு துறையிலும் ஆழமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை பாகிஸ்தானிடம் சொன்னோம். ஷெரீப் சொன்னது போல் எங்கள் நாடுகள் இடையே உடைக்க முடியாத அண்ணன், தம்பி உறவு உள்ளது. இதை இன்னும் வலுப்படுத்தி இருக்கிறோம் என்று எர்டோகன் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான போரில் பகிரங்கமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்கிய துருக்கி, இப்போது பாகிஸ்தானுக்கு உளவு தகவல், ராணுவ உதவியை இன்னும் மேம்படுத்த உத்தரவாதம் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, பாகிஸ்தான் இரண்டுமே முஸ்லிம் நாடுகள். அதுவும் சன்னி முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகள். சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகள் எங்கெல்லாம் பிரச்னையை சந்திக்கின்றனவோ, அங்கெல்லாம் ஓடி சென்று உதவுவதை துருக்கி வேலையாக வைத்து இருக்கிறது.
அப்படி தான் சிரியா, பாகிஸ்தான் விவகாரங்களில் அந்த நாடு மூக்கை நுழைத்து இருக்கிறது. காஷ்மீர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரங்களில் முதலில் இருந்தே பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் துருக்கி செயல்படுகிறது. ஐநா சபையிலும் நமக்கு எதிராக பேசுவதை துருக்கி வாடிக்கையாக வைத்துள்ளது.இதனால் ஏற்கனவே அந்த நாட்டுடன் நமக்கு நல்ல உறவு கிடையாது. பாகிஸ்தான் போருக்கு பிறகு அந்த உறவு இன்னும் மோசம் அடைந்து விட்டது. துருக்கி அதிபர், பாகிஸ்தான் பிரதமர் சந்திப்புக்கு பிறகு இன்னும் நிலைமை மோசம் அடையும் என்று நம் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: புருஷனை கொல்லுறப்போ கைகட்டியா நிப்பீங்க! பெண்களுக்கு வீரமே இல்லை! பாஜ எம்.பி சர்ச்சை பேச்சு..!