தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று நூறு நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் சாதனைகளை வெளிப்படுத்தும் முழுப்பக்க விளம்பரங்கள் தென்னிந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரங்கள், வெறும் அரசு மக்கள் தொடர்பு நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை.
குறிப்பாக கர்நாடகாவில் கன்னட மொழி நாளிதழ்களில் கன்னடத்திலேயே வடிவமைக்கப்பட்ட விளம்பரங்கள் அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பொதுவாக மாநில அரசுகள் அண்டை மாநிலங்களில் தங்கள் சாதனைகளைப் பிரசாரம் செய்யும்போது ஆங்கில நாளிதழ்களையே முன்னிலைப்படுத்துவது வழக்கம். ஆனால் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, கர்நாடகாவின் முன்னணி கன்னட நாளிதழ்களில் நேரடியாக கன்னட வாசகர்களைச் சென்றடையும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், 717 மதுபானக் கடைகள் மூடல், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் ₹1.02 லட்சம் கோடி முதலீட்டு உறுதிப்பாடுகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழி நாளிதழ்களிலும் இதேபோன்ற விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!

அரசியல் வட்டாரங்கள் இந்த நகர்வை பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்ட உத்தியாகப் பார்க்கின்றன. பெங்களூர் பெருநகர மாநகராட்சி பகுதிகளில் சிவாஜிநகர், காந்திநகர், சாந்திநகர், புலிகேசி நகர், மல்லேஸ்வரம் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற இடங்களில் தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்றனர். இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். விஜயின் திரைப்பட ரசிகர் வட்டாரத்தை வாக்கு வங்கியாக மாற்றுவதோடு, கன்னட மொழி வாசகர்களிடமும் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து தவெகவை அண்டை மாநிலத்திலும் விரிவுபடுத்தும் நோக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநில தவெக நிர்வாகிகள், வரவிருக்கும் பெங்களூர் வார்டு தேர்தல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி தென்னிந்திய அளவில் தவெக ஒரு புதிய அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்த முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த விளம்பர வியூகம் பெங்களூர் உள்ளூர் அரசியலில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!