திருச்சி அரசு பொது மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிப்பதாக விஜய் கூறினார்.
மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்தார். இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப விசில் அடிக்காதீங்க..! தொண்டர்களை ஜாலியாக கலாய்த்த அன்புமணி..!
மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விஜய், அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!