அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் தாக்கம் இந்திய விமானப் போக்குவரத்திலும் எதிரொலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சர்வதேச விமானப் பயணத்தில் இந்திய விமான நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதே காலகட்டத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா-ஈரான் மோதலின் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கோடைக்காலப் பயணத்தின் முக்கிய காலகட்டமாக கருதப்படும் இந்த மூன்று மாதங்களில், இந்தியாவுக்குள் மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 1.9 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 1.7 கோடியாக குறைந்துள்ளது. இது சுமார் 10.5 சதவீத சரிவாகும்.
இதையும் படிங்க: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை சுமார் 26 சதவீதம் குறைந்திருப்பதாக கூறப்படுவதுதான். அதேநேரத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவுடன் மேற்கொண்ட சர்வதேச சேவைகளில் பயணிகள் எண்ணிக்கை சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களை விட சில வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போதைய சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக துபாயை மையமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் இந்திய பயணிகள் எண்ணிக்கை 13.8 லட்சத்தில் இருந்து 14.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 7 சதவீத வளர்ச்சியாகும்.
இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் மேற்கத்திய நாடுகளுக்கான விமானப் பாதைகளில் கூடுதல் சுமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் பதற்றம் மற்றொரு சவாலாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 43.3 லட்சத்தில் இருந்து நடப்பாண்டில் 27.6 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல் இண்டிகோவின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையும் 39.5 லட்சத்தில் இருந்து 33.4 லட்சமாக சரிந்துள்ளது.
மறுபுறம் லுப்தான்சா, ஸ்விஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்திய சேவைகளை அதிகரித்து வருகின்றன. இதனால் இந்திய விமான நிறுவனங்களின் சரிவுக்கான காரணங்கள் குறித்து விமானப் போக்குவரத்து துறையில் விவாதம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!