காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதால் பாகிஸ்தான் மீதான தாக்குதலை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார் என்றும் 1971ல் அமெரிக்க அச்சுறுத்தலை மீறி இந்தியா பாகிஸ்தானை உடைத்தது என்றும் வரலாற்றை திரித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசம் போபாலில் நடந்த கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார்.

தனிநாடு கேட்டு போராடியவர்களுக்காக ராணுவத்தை இந்திரா அனுப்பிவைத்தார். அதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையோடு ஒப்பிடுவது மிகவும் தவறானது. வரலாறு குறித்த புரிதல் இல்லாதது. பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்காளத்துக்கும் நிலம் வழி இணைப்பு இல்லாததால் இயல்பாகவே கிழக்கு வங்கத்தில் இருந்தவர்கள் தனி நாடு கேட்டு போராடினர். பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்கத்துக்கும் நடந்த சண்டையில் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!
அதை சமாளிக்க முடியாமல்தான், அப்போதைய பிரதமர் இந்திரா போர் நடத்தி வங்க தேசம் உருவாக உதவி செய்தார். ஆனால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்திய போதெல்லாம் காங்கிரஸ் அரசு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.

2008ல் நடந்த மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் 164 பேரை படுகொலை செய்தனர். அதற்கு கூட காங்கிரஸ் பதிலடி கொடுக்கவில்லை. வழக்கம் போல கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றில்தான் காங்கிரஸ் ஈடுபட்டது.
பாஜக அரசுகள் அமைந்தபோதெல்லாம் அப்படி சமாதான நடவடிக்கையில் ஈடுபடாமல் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. 1999ல் கார்கில் போர் மூலம் அன்றைய பிரதமர் வாஜ்பாய் பதிலடி கொடுத்தார். 2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நமது வீர ர்கள் நாற்பது பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக பிரதமர் மோடி துல்லிய தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது போன்ற தாக்குதலை காங்கிரஸ் அரசுகள் எப்போதும் நடத்தியதில்லை.

கடந்த ஏப்ரல் 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் இருந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீதும், ராணுவ நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. இதை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால், காங்கிரசுக்கும் ராகுலுக்கும் ஒப்புக்கொள்ள மனமில்லை. அதனால் வாய்க்கு வந்தபடி ராகுல் பேசுகிறார்.
இந்தியா மீது யார் தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது என பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருக்கிறார். நமது ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுத்தது. மத்திய பாஜ அரசு உள்நாட்டுப் பிரச்னையில் 3வது நாடு தலையிட அனுமதித்தது இல்லை. இப்போதும் அது நடக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு பணிந்துவிட்டதாக ராகுல்காந்தி திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார்.

மோடி மிகப் பெரும் மக்கள் செல்வாக்கு மிக்க பிரதமர். உறுதியான, துணிச்சலான, அறிவாற்றல் மிக்க தலைவர். அவர் யாருக்கும் அணிபணிபவர் இல்லை. இதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புரிந்துகொண்டுள்ளார். ராகுல் காந்தி புரிந்தும் புரியாதது போல நடித்துக்கொண்டு இருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாஜவுக்கு எதிராக அரசியல் செய்யலாம் என ராகுல் நினைத்தால் ஏமாந்து போவார். பிரதமர் மோடி கரங்களில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதனால்தான் எந்தக் குடும்ப பின்னணியும் இல்லாத மோடி தொடர்ந்து தேர்தலில் வெற்றிப்பெற்றுக்கொண்டு இருக்கிறார். இதை உணர்ந்து தேச பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்வதை ராகுல்காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!