விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையையே கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய திருமாவளவன், “ஒரு தனிநபரை மாற்றுவதால் அடிப்படைப் பிரச்சினை தீராது. அதிகாரிகளையோ அமைச்சர்களையோ மாற்றினாலும் விளைவுகள் மாறாது. இந்த அமைப்பில் உள்ள ஓட்டை உடைசல்களை முழுமையாக நீக்காமல் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று சுட்டிக்காட்டினார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நீட் போன்ற போட்டித் தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு என்பது விசிகவின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது என்றும் அவர் நினைவுபடுத்தினார். இரு கட்சிகளுமே அதை ரத்து செய்ய முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், “நீட் தேர்வே கூடாது என்பது விசிகவின் ஒற்றை முழக்கம்” என்று அறிவித்தார். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் இந்தியா முழுவதும் ஒரே தேர்வாக நடத்தப்படும் இந்த அமைப்பைத் தமிழக அரசு தனியாக நடத்த முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு உயர்ந்தாலும் நீட் மதிப்பெண்ணே தீர்மானிக்கும் நிலை உள்ளது. 1,200க்கு 1,190 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட இடம் கிடைக்காததால், மாதக்கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான ரூபாய் புரளும் வணிகமாக மாறியுள்ளது. குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாராக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது குறித்தும் விமர்சனம் தெரிவித்தார். “போன ஆட்சியில் இருந்த போலீஸை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும், அம்பேத்கர் சிலையை ஷீட் போட்டு மூடும் செயல் தொடர்கிறது. என்ன மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!