சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் முதலமைச்சர் விஜய் உணர்ச்சி பொங்கப் பேசினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் உதவி இயக்குநரின் மகனாக, வறுமை என்னவென்று அறிந்தவன் நான். பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. உங்களைப் போலவே ஒரு சாதாரண மனிதன்” என்று தொடங்கிய அவர், மக்களின் அன்பால் சினிமாவில் உயர்ந்ததை நினைவுகூர்ந்தார்.
“என்னுடன் நின்று கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன். பொய்யான வாக்குறுதிகள் கொடுக்க மாட்டேன். சாத்தியமில்லாததைச் செய்ய மாட்டேன், ஆனால் மக்கள் ஆதரவுடன் சாத்தியமில்லாததையும் சாத்தியமாக்குவேன்” என்று உறுதியளித்தார். மேலும், “மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன். விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்ய விடவும் மாட்டான்” என்று கூறினார்.
இதையும் படிங்க: Breaking News! முதல்வர் விஜய் முதல் கையெழுத்து!! அதிரடி காட்டிய ஜனநாயகனின் சர்க்கார்!!

முன்னைய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் விட்டுச் சென்றுள்ளதாகவும், தமிழ்நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்த விஜய், முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார். “கஜானா காலியாக உள்ளது. பொறுப்பு கொடுத்துள்ளீர்கள், போதிய அவகாசம் கொடுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார். ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் நடத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.
“எனக்கு அவமானம் கொடுத்தவர்களாக இருந்தாலும், 8 கோடி மக்களும் என் மக்கள்தான். எதிரி என்று யாரும் இல்லை” என்று ஒற்றுமைக்கு வலியுறுத்திய விஜய், “குட்டி நண்பா, நண்பீஸ்க்கு” நன்றி தெரிவித்தார். அவர்களால்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களின் எதிர்காலத்துக்கு பல நல்ல காரியங்கள் செய்வேன் என்றும் உறுதியளித்தார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜயின் பெற்றோர், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதிய அரசு மக்கள் நலனுக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்!! கண்ணீர் மல்க கண்டு ரசித்த பெற்றோர்! உணர்ச்சிமிகு தருணங்கள்!!