மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ள நிலையில், உக்ருல் (Ukhrul) மாவட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அம்மாநில அரசு 5 நாட்களுக்கு இணைய சேவையைத் துண்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நிலவி வந்த இனக்கலவரம் காரணமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் நிலைமை சீரானதை அடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு மீண்டும் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இந்தச் சூழலில், உக்ருல் மாவட்டத்தில் நிலப் பிரச்சனை தொடர்பாகத் தங்குல்-நாகா (Tangkhul-Naga) மற்றும் குக்கி (Kuki) இனத்தவர்களிடையே ஏற்பட்ட சிறு தகராறு, பின்னர் பெரிய அளவிலான ஆயுத மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டதில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதையும் படிங்க: மணிப்பூர்: போராட்டத்தில் குதித்த குக்கி இன மக்கள்..!! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!
வன்முறையைத் தொடர்ந்து உக்ருல் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் வரும் 5 நாட்களுக்குச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. "அமைதியை நிலைநாட்டப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என முதல்வர் அலுவலகம் எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் வன்முறைப் பாதித்த பகுதிகளில் கூடுதல் ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் மோதல் மணிப்பூரின் இதரப் பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க மாநில அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!