சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 13 போலீசார் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறிய பிறகும் போலீசாரின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் நில பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த 63 வயது விவசாயி அந்தோணிராஜை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் முரளிதரன், தலைமை காவலர்கள் கனகராஜ் மற்றும் முத்துக்கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சென்னை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, எஸ்.ஐ.க்கள் திருமுருகன் மற்றும் செல்லத்துரை ஆகியோர், 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய ரவுடி வெள்ளைக்காளிக்கு சலுகை காட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 10 மணிக்கு மேல டாஸ்மாக் திறந்திருந்தால் போலீஸ் மீது நடவடிக்கை! எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் வார்னிங்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் துரைராஜ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர், ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளித்த 35 வயது பெண்ணின் புகாரை அலட்சியமாக கையாண்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், திருவொற்றியூரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் பழனி தாலுகா போலீஸ் நிலைய எஸ்.ஐ. ராஜகோபால் ஆகியோர் புகார் அளித்த பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடந்த 15 நாட்களில் 5 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு மற்றும் 2 காவலர்கள் என மொத்தம் 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்யும் நிலையில், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகள் காவல்துறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!