தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை 'ஒட்டுப்போட்ட கூட்டணி' என்று விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள் மற்றும் பேச்சுக்கள் குறித்துச் சென்னை வியாசர்பாடி புனித ஜோசப் பேராலயத்தின் அருட்தந்தை சார்லஸ் குமார் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
விஜய்யின் அரசியல் முதிர்ச்சி மற்றும் அவரது தனிப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து அருட்தந்தை எழுப்பியுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யும் பாஜக-வை எதிர்க்காத விஜய், எப்படித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவார்? என்று அருட்தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டில் பாஜக குறித்த தெளிவான எதிர்ப்பு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

விஜய் இன்னும் சினிமா உலகத்திலேயே அரசியல் செய்ய நினைக்கிறார் என்று விமர்சித்த அவர், நிஜ அரசியல் என்பது திரையில் தோன்றுவது போன்றது அல்ல என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தக் குடும்பத்தையே காப்பாற்ற முடியாத ஒருவருக்கு எப்படித் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்? என்று விஜய்யின் தனிப்பட்ட குடும்பச் சிக்கல்களை முன்வைத்து அவர் அதிரடி வினாவை எழுப்பியுள்ளார்.
விஜய் பெயரளவில்தான் கிறிஸ்தவராக உள்ளார்; செயல் அளவில் அவர் அப்படி இல்லை. மதத்தைப் பார்த்து மட்டுமே கிறிஸ்தவர்கள் யாருக்கும் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்று அருட்தந்தை சார்லஸ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது உரையில் மன்னராட்சிக்கு எதிரான மக்களாட்சி என்று முழக்கமிட்டுள்ள சூழலில், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மீகத் தலைவரிடமிருந்து வந்துள்ள இந்த எதிர்ப்பு அரசியல் ரீதியாகக் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, விஜய் தனது அரசியல் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்ட முயன்று வரும் வேளையில், அவரது மத அடையாளம் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்த இத்தகைய விமர்சனங்கள் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு எதிராகத் தொகுதியின் முக்கியப் பிரமுகர்கள் எழுப்பும் இத்தகைய கேள்விகளுக்கு அவர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!