ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போரால் அங்கு பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதால், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நல அமைப்பான FSUI வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, முக்கிய துறைமுகங்கள் மற்றும் கடல்சார் போக்குவரத்து பகுதிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த சூழலில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'எம்.வி. அமீர் 1' என்ற சரக்குக் கப்பல் பாதுகாப்பு காரணங்களால் தொடர்ந்து அங்கிருந்தே இயங்காமல் உள்ளது. அந்தக் கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் 13 பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரிய தகவலாகும்.
இதையும் படிங்க: காப்பாத்துங்க!! மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா!! நட்பு நாடுகளிடம் உதவி கோரும் உக்ரைன்!
போர் காரணமாக கப்பல் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கப்பலில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினரும் கடல்சார் அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

எந்த நேரத்திலும் தாக்குதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவுவதால், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று FSUI மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள் உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, மாலுமிகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அதிபர் டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு!! ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய முயற்சி!