அதிமுகவில் மீண்டும் தர்ம யுத்தம் வெடித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக வெடித்த சர்ச்சை, இன்று பூதாகரமாக மாறியுள்ளது. சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவைச் சந்தித்து ஒரு கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்றும், கொறடாவாக சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்றக் குழு துணைத் தலைவராக சி.வி. சண்முகம் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சி.வி. சண்முகம், “சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், சுமார் 30 பேர் அந்த அணியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி அணியில் 17 பேர் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் எந்த அணியை அங்கீகரிப்பார் என்ற கேள்விக்கு, “சட்டமன்ற நடைமுறையின்படி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரிக்கும் அணியே அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம்” எனக்கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க. தற்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அல்ல என்பதும் குறிப்பிடப்பட்டது. 59 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. தான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க. இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்பட முடியும். அதனால், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அதிகாரப்பூர்வ பதவிகள் அக்கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது என்னவெனில், ஒரே நாளில் சபாநாயகரிடம் இரண்டு தரப்பினரும் தனித்தனியாக கடிதங்கள் அளித்திருப்பதே ஆகும். ஒன்று எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் அணியிலிருந்து; மற்றொன்று எஸ்.பி. வேலுமணியை ஆதரிக்கும் அணியிலிருந்து.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு?! 36 எம்.எல்.ஏ-க்கள் முரண்பாடு! அதிமுக சட்டசபை தலைவர் பதவிக்கு ஆப்பு?!
வேலுமணி அணியின் கடிதத்தில், “பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். எனவே, அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை அங்கீகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், இதுவே கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சில நிர்வாகிகள், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வளர்ச்சி பெறவில்லை. பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்கக்கூடிய தலைமை தேவை. அந்த வகையில் எஸ்.பி. வேலுமணி ஏற்றவர்” என்று கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாறாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், “அவர் கட்சிக்காக மிகுந்த உழைப்பு எடுத்துள்ளார். பல தேர்தல்களில் தொடர்ந்து பிரசாரம் செய்துள்ளார். கட்சியில் ஒழுக்கத்தை நிலைநிறுத்த சில கடினமான முடிவுகள் அவசியம்” என்று வாதிடுகின்றனர்.
மேலும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கப்பூர்வ அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசும்போது, “அ.தி.மு.க. என்ற அடையாளத்துடன் வரும் ஆதரவை அவர்கள் ஏற்க விரும்பவில்லை. ஆனால் தனிநபர் அடிப்படையில் வரும் ஆதரவுகளை ஏற்கலாம்” என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சட்டப்பேரவையில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேவையான பெரும்பான்மை ஏற்கனவே இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே, அ.தி.மு.க. அணிகளின் ஆதரவு அவசியமில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக, அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் மனவருத்தம் நிலவுவதாக கூறப்பட்டது. “எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவைப் போல மீண்டும் கட்சி ஒன்றுபடும் என்று நம்பினோம். ஆனால் தற்போது கட்சி மேலும் பிளவுபடும் நிலைக்கு சென்றுள்ளது” என்று அவர்கள் வேதனை தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!