ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன் என்று சசிகலா கூறினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கோட நாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலா வந்தார். அப்போது சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்களுக்கான ஆட்சியை வழங்கிய ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக உள்ளது. அதன் காரணமாகவே கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பூமி பூஜை செய்தோம்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கேட்டோம். ஆனால், ஏதாவது காரணங்களைச் சொல்லி ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் மணி மண்டபம் கட்டுவதற்கு திமுக அரசு தடை விதித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கு, திமுக அரசு தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வந்துகொண்டிருக்கிறது.
தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதுபோன்று மணி மண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ள லாம். ஆனால், எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்திருக்கிறது. என்றாலும் அனைத்து தடைகளையும் மீறி நிச்சயமாக இங்கு ஜெயலலிதாவுக்கான மணி மண்டபத்தைக் கட்டி எழுப்புவோம். இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் மக்கள் துணை இருக்க வேண்டும். நான் சென்ற இடங்களில் எல்லாம் அதுவே மக்களின் எண்ணமாக உள்ளது. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு வரி, வரி என வசூல் செய்வதில் மட்டுமே முனைப்பு காட்டுகிறது. மக்களிடம் வசூல் செய்து திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றால், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன்” என்று சசிகலா கூறினார்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் துளிக்கூட மெயின்டனன்ஸ் இல்ல..! திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு..! ஜெ. உதவியாளருக்கு சிபிசிஐடி சம்மன்..!