சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்துக்கான தற்காலிக கூட்டணி என்பது தெளிவாக நிரூபணமாகிவிட்டதாக அ.தி.மு.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையிலும் இணைந்துள்ளன.
இந்த நடவடிக்கையை தி.மு.க. துணைப் பொதுச் செயலர் ராஜா மிகக் கடுமையாக விமர்சித்த நிலையில், அ.தி.மு.க.வும் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தி.மு.க. கூட்டணியை தாக்கியுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி பேச்சை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!! கம்யூ., விசிக கட்சிகளுக்கு கொடுத்த அசைன்மெண்ட்! அரசியல் திருப்பம்!

அ.தி.மு.க. அறிக்கையில், “தி.மு.க. கூட்டணியில் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு. வெளியில் பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியைத்தான் கொள்கை கூட்டணி என மேடைக்கு மேடை மார்தட்டினார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். யாருடைய கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்துக்கானது என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அணைக்க முடியாத அனல் தகிக்கும் தருணத்திற்காக மக்களோடு சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம்” என அ.தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒற்றுமையாகக் காட்டிக்கொண்ட கட்சிகள், ஆட்சி அமைப்பதற்குள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பியுள்ள நிலை, அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க.வின் இந்த விமர்சனம் எதிர்கால அரசியல் கூட்டணிகள் மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!