சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உறுதியளித்திருந்தார். ஆனால், இறுதியில் கட்சிக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள், இந்த முடிவால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநில இளைஞரணி செயலர் ஆசைத்தம்பி ம.தி.மு.க.விலிருந்து விலகி, தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இணைந்தார். தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலர் கழக குமார் தலைமையில் ஆறு பகுதி செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கட்சியைவிட்டு விலகினர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலர் சோமசுந்தரம், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலர் கோபால், அவைத்தலைவர் கந்தசாமி, பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலர்கள் லோகநாதன், நல்லசிவம், துளசிமணி, வீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்..! வைகோ நம்பிக்கை..!!

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் அரசியலில் கட்சியின் சார்பாக கிடைக்கும் பொறுப்புகள் கவுரவமான அடையாளம் அல்ல; அது கட்சியால் கொடுக்கப்படும் பிச்சை என்று துரை பேசியது மிகவும் தவறு. சுயமரியாதையை சீண்டும் வகையில் ‘சவுக்கு சுழற்றுவேன்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உளமார உண்மையுடன் தேர்தல் பணிகளைச் செய்தோம். எனவே, இந்த அவமானத்திலிருந்து விடுபடும் வகையில் கட்சிப் பதவிகளிலிருந்து விலகுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துரை பேசிய இந்த வார்த்தைகள், கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் சீட் வாக்குறுதி நிறைவேறாதது மற்றும் கட்சித் தலைமையின் அணுகுமுறை ஆகியவை, ம.தி.மு.க.வில் உள் அதிருப்தியை அதிகரித்துள்ளன.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால், ம.தி.மு.க.வின் அடித்தளத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த வெளியேற்றங்கள், கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ம.தி.மு.க. தலைமை இந்தப் பிரச்னையை உடனடியாக கவனத்தில் கொண்டு, நிர்வாகிகளின் அதிருப்தியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: தேவையின்றி ஸ்டாலின் மீது அபாண்டப் பழியைச் சுமத்தினார் இபிஎஸ்..!! கொந்தளித்த வைகோ..!!