வர உள்ள 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அமித் ஷாவே நேரடியாக களமிறங்கி பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் அவருடைய தொடர் முயற்சியால் முடியாவே முடியாது என்ற அதிமுக கூட்டணியும் உறுதியானது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என பாஜக வாக்கு கொடுத்திருந்தாலும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தங்களது கூட்டணியில் தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருக்கிறார். ஆனால் அமித் ஷாவோ முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கட்டாயம் தேவை என்பதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறாராம்.

அதேபோல் நாடார் சமூக வாக்குகளுக்கு தமிழிசை சவுந்தராஜன், பொன் ராதாகிருஷ்ணனையும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலையை களமிறக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம். இதற்கிடையே வடமாவட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமித் ஷா, வன்னியர் வாக்குகளை கொத்தாக அள்ள வேண்டும் என்றால் கட்டாயம் பாமக கூட்டணியில் வேண்டும் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி எம்.பி.சீட்டை அன்புமணிக்கு கொடுத்திருந்தாலே அவர் நம்முடன் கூட்டணிக்கு வந்திருப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தனது கட்சிக்கே பயன்படுத்திக் கொண்டதால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார் என்பது போல் அமித் ஷாவிடம் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

எனவே எடப்பாடி போட்ட தப்புக்கணக்கை சரி செய்ய முடிவெடுத்த அமித் ஷா, பாஜக சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை அனுப்பி ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தையும், கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்த உத்தரவிட்டாராம். அதனால் தான் கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு ராமதாஸ் உடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது. என்ன நடந்தாலும் இன்று மதுரையில் அன்புமணி, ராமதாஸ் தன்னுடன் இருந்தாக வேண்டும் என அமித் ஷா கட் அண்ட் கறாராக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்து தமிழக அரசியலில் பல அதிரடிகள் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட அண்ணாமலை... நாவை அடக்கச் சொன்ன அமித் ஷா...!