கோவை, கருமத்தம்பட்டி பகுதியில், சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டதாகவும் மே நான்காம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தெரிவித்தார்.
நாம பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நமக்குத் தேவை ஒன்றிய அரசோடு ஒத்துப் போகிற ஒரு மாநில அரசு. அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!
இன்று நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளார். பொங்கல் அன்று இலவச வேட்டி, சேலை தமிழக மக்களுக்கு அன்போடு கொடுக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதி தீபாவளி அன்றும் இலவச வேட்டி, சேலையை தமிழக மக்களுக்கு கொடுக்கின்றோம். இதனால் இப்பகுதி விசைத்தறியாளர்களிடமிருந்து வாங்க போகிறோம்.
கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு காலகட்டம் என்று விமர்சித்த அவர் இந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகளும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக குழந்தைகள் மீதான போக்சோ சட்டத்தின் கீழ் சுமார் 4 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். பள்ளி வாசல்களிலேயே கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதாகவும் அதனைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டதாகவும் அவர் சாடினார். \
கோவை மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இப்பகுதி மக்களின் உழைப்பை மதிக்காத திமுகவிற்கு இந்த மண்ணில் இடமில்லை என்றார். ஒன்றிய அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 2,550 கோடி ரூபாயும் ரயில்வே மேம்பாட்டிற்காக கோடிக்கணக்கான நிதியையும் ஒதுக்கியுள்ள நிலையில் எதையுமே செய்யவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக அவர் தெரிவித்தார்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை திமுக அரைகுறையாக நிறைவேற்றியதால் சூலூர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத்திக்கடவு 2.0 திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். நெசவாளர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படும் என்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். கல்விக்கடன் ரத்து மற்றும் அரசு வேலைவாய்ப்பு என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறிய
அண்ணாமலை சூலூர் தொகுதியில் சிறப்பான பணிகளை மேற்கொண்ட வி.பி. பழனிச்சாமி என்று வேட்பாளர் பெயர் தெரியாமல் மாற்றி சொல்லிய பிறகு , கந்தசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முன்னிலையில் பேசி சமாளித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!