டெல்லி: பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். தமிழக அரசியலில் தனிப்பாதை வகுக்க முடிவெடுத்துள்ள அண்ணாமலை, இன்று (ஜூன் 4) பிரதமரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் போன்று தானும் தனி அரசியல் பாதையில் பயணிக்க முடிவு செய்த அண்ணாமலை, சென்னையில் இருந்து திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், பாஜக முக்கிய தலைவர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். பாஜக பொதுச் செயலர் பி.எல். சந்தோஷை சந்தித்து தனது முடிவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவது குறித்த தகவலைத் தெரிவித்து, தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கப் போவதாக தெரிவித்து, அவரது ஆசியைப் பெற்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அண்ணாமலை, தனது 42-வது பிறந்தநாளில் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து நாளை தமிழகம் திரும்பும் அண்ணாமலை, சென்னை வந்ததும் நிருபர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பில் வரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக பாஜகவில் தீவிர அரசியல் செயல்பாட்டாளராகக் களமிறங்கிய அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே தனது எதிர்கால அரசியல் பாதை குறித்து யோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இன்றைய சந்திப்புகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!