பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் தெரிவித்ததாக வெளியான குற்றச்சாட்டு, பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தன் மீது குற்றச்சாட்டு கூறிய முன்னாள் நீதிபதிக்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக குர்ப்ரீத் கவுர் ரூ.5 கோடி வழங்க முயன்றதாக ஓய்வு பெற்ற பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ‘லீகல் ரைட்ஸ் அப்சர்வேட்டரி’ என்ற அமைப்பு புகார் அளித்தது.
இதையும் படிங்க: தரமில்லை எனில் வேண்டாம்! ரேஷன் அரிசி தரத்தில் அதிரடி சோதனை! தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு!
பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையில் இதுபோன்ற தலையீடுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு தனது கவலையை தெரிவித்தது.

இந்த புகாரை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி.,க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை குர்ப்ரீத் கவுர் மறுத்துள்ளதுடன், ரஞ்சித் சிங்குக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னைப் பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறினால் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் முன்னாள் நீதிபதியின் குற்றச்சாட்டு, மறுபுறம் அதற்கு எதிரான சட்ட நோட்டீஸ் என விவகாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ள விசாரணை அறிக்கையே, இந்த குற்றச்சாட்டின் அடுத்தகட்ட நகர்வில் முக்கியத்துவம் பெறும்.
இதையும் படிங்க: ஹல்த்வானி விவகாரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது கார்கே அதிருப்தி? பின்னணி என்ன?