குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 15 மாநகராட்சிகளில் 4-ஐ முழுமையாக கைப்பற்றிய பாஜக, மீதமுள்ள 11 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்த முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 34 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 260 தாலுகா பஞ்சாயத்துகளில் உள்ள 9,200 பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. மாநகராட்சி பகுதிகளில் 55 சதவீதமும், மொத்தமாக 67 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.
ஓட்டு எண்ணும் பணி இன்று நடைபெற்று வரும் நிலையில், மேஹ்சானா, மோர்பி, நதியாத் மற்றும் வாபி ஆகிய நான்கு மாநகராட்சிகளை பாஜக முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

இந்த நான்கு நகரங்களும் சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவை. குறிப்பாக மேஹ்சானா, மோர்பி மற்றும் நதியாத் மாநகராட்சிகளில் ஒரு வார்டில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.
ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜாம்நகர், ஆனந்த், கரம்சத், காந்திதம், நவ்சாரி, போர்பந்தர் மற்றும் சுரேந்தர் நகர் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், 2027 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் பாஜகவின் செல்வாக்கு இன்னும் வலுவாக இருப்பதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியவில்லை.
இந்தத் தேர்தல் முடிவுகள் குஜராத் அரசியலில் பாஜகவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!