தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதி தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் ரங்கராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறம் உள்ள ரங்கராஜபுரம் பகுதியில் இன்று நண்பகல் வேட்பாளர் அருள் பிரகாசம் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் சென்ற ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பாடல்கள் மிக அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்டன. அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் குடிபோதையில் நின்றிருந்த கார் எலக்ட்ரீசியன் சம்பத் (45), பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு சத்தமிட்டுள்ளார்.
இருப்பினும், ஆட்டோவில் இருந்தவர்கள் சத்தத்தைக் குறைக்காததால் ஆத்திரமடைந்த சம்பத், தனது கையில் இருந்த காலி மதுபாட்டிலை வேட்பாளர் மற்றும் தொண்டர்களை நோக்கிக் கீழே வீசினார். வேட்பாளர் அருள் பிரகாசம் அந்த நேரத்தில் சற்றே நகர்ந்து கொள்ளவே, அவர் மீது பட வேண்டிய பாட்டில் குறிதவறி ஆட்டோ மீது விழுந்து சுக்குநூறாக உடைந்தது. இதில் சிதறிய கண்ணாடித் துகள்கள் அருகில் இருந்த மற்றொரு நபர் மற்றும் தொண்டர்கள் மீது பட்டன. நல்வாய்ப்பாக வேட்பாளர் மீது கண்ணாடித் துகள்கள் படவில்லை.
இதையும் படிங்க: கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!
இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள், உடனடியாக மாடிக்குச் சென்று போதையில் இருந்த சம்பத்தைப் பிடித்துக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!