தமிழகத்தின் முக்கிய கடலோர சாலை வழித்தடமான கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) முழுமையாக அகலப்படுத்தி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 700 கிலோமீட்டர் நீளத்தில் எட்டு வழிச்சாலையாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தென் மாவட்டங்களுக்கான பயண நேரம் சுமார் 40 சதவீதம் வரை குறைவதுடன், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல பகுதிகளை ஏற்கனவே நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தியுள்ளன. சென்னை–நாகப்பட்டினம் இடையேயான 320 கிலோமீட்டர் தூரத்தில் 250 கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலைத் திட்டம் ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இருப்பினும், பல பகுதிகள் இன்னும் இருவழிச் சாலையாகவே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை அமைக்கப்பட்டு வரும் சென்னை புறநகர் சுற்றுச்சாலைப் பணிகளை ஆய்வு செய்த பிறகு பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் ஆறு மற்றும் எட்டு வழிச்சாலைகளின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், செங்கல்பட்டிலிருந்து சென்னை நகருக்குள் நுழைய சில நேரங்களில் மூன்று மணி நேரம் வரை ஆகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: முட்டுக்காட்டில் புதிய சட்டசபை! முதல்வர் விஜய் முடிவு? கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு குறி!

மேலும், கடலோரப் பகுதிகளில் எட்டு வழிச்சாலை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என்றும், புதுச்சேரி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவுபடுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே முழுமையாக நிதியளித்து செயல்படுத்த வேண்டும் என்றும், மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் சாலைகளை அமைப்பதில் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொழில்துறை வழித்தடங்களுக்கான புதிய தரநிலைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், கனரக வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வலுவான சாலைகள் அமைப்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். எண்ணூரிலிருந்து துறைமுகம் வரை வடக்கு துறைமுக அணுகுசாலை மற்றும் மத்திய துறைமுக இணைப்புச் சாலை போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களும் வேகமாக முன்னேறி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த திட்டங்கள் நிறைவேறினால், தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய உயர்நிலை சாலை திட்டம் ரத்து? அமைச்சரவையில் முக்கிய முடிவு!