ஈரான் நாட்டின் ஆன்மீக மற்றும் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் இன்று பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், இஸ்ரேலின் பயங்கரவாதப் போக்கை நிறுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ. சண்முகம் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் இதில் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், ஈரான் நாட்டின் தலைவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தப் படுகொலை சர்வதேச இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் இந்த அராஜக போரால் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐநா சபை இதில் உடனடியாகத் தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நூற்றுக்கணக்கானத் தொண்டர்கள் பங்கேற்று, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிபர்களின் உருவப் படங்களை ஏந்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முக்கியத் தலைவர்கள் பங்கேற்றதாலும், மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போக்குவரத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.
கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கமேனி தங்கியிருந்த ரகசிய இடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரான் - இஸ்ரேல் இடையே நேரடிப் போர் மூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.