'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை காங்கிரஸ் சொத்தையும் அபகரிக்க, அக்கட்சி தலைமை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மிக மதிப்புமிக்க சொத்தான சென்னை தேனாம்பேட்டை நிலத்தை மீட்கும் பெயரில், கட்சி தலைமை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 30 கோடி ரூபாய் கடன் கொடுத்து, 'நேஷனல் ஹெரால்டு' சொத்து மாற்றம் போன்று இந்த சொத்தையும் அபகரிக்க முயல்வதாக கட்சியினரிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.3,000 கோடி வங்கி மோசடி! அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! சிறப்பு குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!
1955-ல் பேரறிஞர் காமராஜர் உருவாக்கிய 'தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை'க்கு சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள 180 கிரவுண்ட் நிலம் மிக முக்கியமானது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய்க்கு மேல்.
1996-ல் அறக்கட்டளை உறுப்பினர்களாக மூப்பனார், சி.சுப்பிரமணியம், பா.ராமச்சந்திரன், ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தபோது, இந்த நிலத்தில் கட்டடம் கட்ட ரேங்கா பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வருவாயில் 60 சதவீதம் அறக்கட்டளைக்கும் 40 சதவீதம் நிறுவனத்துக்கும் என்று முடிவானது. நிறுவனம் 3 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால் CMDA அனுமதி கிடைக்காததால் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாறியதால், நிறுவனம் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு நிலத்தை மீட்க முயன்றார். ஆனால் ரேங்கா பில்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அறக்கட்டளை கூட்டம் நடந்தது.

இதில் அகில இந்திய இணை பொருளாளர் விஜய் இந்தர் சிங்லா, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேனாம்பேட்டை சொத்தை மீட்க 60 கோடி ரூபாய் ரேங்கா பில்டர்ஸுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 30 கோடி அறக்கட்டளை நிதியில் இருந்தும், மீதி 30 கோடி காங்கிரஸ் தலைமையிடம் கடனாக பெற்றும் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு கட்சியினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுவது: “காமராஜர் உருவாக்கிய சொத்தை மீட்பது நல்லது. ஆனால் 3 கோடிக்கு பதிலாக இப்போது 60 கோடி கொடுப்பது ஏன்? இது நேஷனல் ஹெரால்டு வழக்கை போன்று சொத்தை அபகரிக்கும் முயற்சியா?” என்று கேள்வி எழுப்புகின்றனர். அறக்கட்டளை உறுப்பினரான சசிகாந்த் செந்தில் எம்.பி. கூட்டத்துக்கு அழைக்கப்படாததும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
2015-ல் டில்லி தலைமை அறக்கட்டளையில் மோதிலால் வோராவை உறுப்பினராக நியமித்ததால் கட்டுப்பாடு டில்லிக்கு சென்றது. இப்போது 30 கோடி கடன் கொடுத்து சொத்தை கைப்பற்ற முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சி மேலிடம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: 24 மணி நேரமும் மக்களுக்கான அரசு... உன்னிப்பா கவனிச்சுட்டு வரோம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!