தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி பங்கு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது” என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதேசமயம் காங்கிரஸுடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் தொடர் எதிர்வினை வந்து கொண்டிருக்கிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே கடுமையான கருத்துகளை வெளியிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான பிரவீன் சக்கரவர்த்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போலவே தமிழக மக்களுக்கும் கூட்டணி அரசு அமைவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
இதையும் படிங்க: காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்க்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அரசுகள் இயங்கி வருகின்றன.”
இந்த பதிவு காங்கிரஸ் தரப்பில் இருந்து வரும் ஆட்சி பங்கு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்து வராது என்று கூறியது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து வளர வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைப்பது அவசியம் என்ற கருத்து கட்சியின் உயர்மட்டத்தில் வலுப்பெற்று வருகிறது.
திமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால் கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் 2026 தேர்தலுக்கு முன்பு பெரும் சவாலாக மாறியுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சி பங்கு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகியுள்ளன.
தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடருமா? ஆட்சி பங்கு கோரிக்கை ஏற்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இரு கட்சிகளும் உரிய நேரத்தில் தெளிவான முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: இதுதான் ஃபைனல்!! காங்கிரஸுக்கு திமுக கொடுத்த ஆஃபர்!! தொகுதி இழுபறிக்கு வச்சாச்சு புல்ஸ்டாப்!