சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவுக் கட்சிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பங்கேற்காது என்றும், தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ள சூழலில், காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதரவுக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து இடைத்தேர்தல் களம் மற்றும் நடப்பு அரசியல் சூழல் குறித்து விவாதிக்க நாளை சென்னையில் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐயுஎம்எல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கூட்டம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், "நாளை நடைபெறவிருக்கும் தவெக ஆதரவுக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம். நாங்கள் தவெக தலைமையிலான கூட்டணிக் கட்டமைப்பிற்குள் நேரடியாக அங்கம் வகிக்கவில்லை. மக்கள் நலன் கருதியும் முற்போக்குக் கொள்கைகளின் அடிப்படையிலும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்; அந்த நிலைப்பாடே தற்போதும் தொடரும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.50 லட்சம் விவகாரம்.. எங்கும் தப்ப மாட்டேன்: முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் ஐகோர்ட்டில் மனு!
கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதன் மூலம், அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் அல்லது திட்டங்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சுதந்திரமாகச் சுட்டிக்காட்டும் இடதுசாரித் தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள சிபிஐ முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக ஆதரவுக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!