திருச்சி திமுக மாநில மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மார்ச் 9-ந் தேதி திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 2021-ம் ஆண்டு மாநாடு நடத்திய அதே இடத்திலேயே தற்போதும் நடைபெறுகிறது. திறந்தவெளி மாநாடாக நடைபெறும் இங்கு, தொண்டர்கள் அமர்வதற்கு 700 ஏக்கர் இடமும், 25 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு இடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தொண்டர்கள் அமரும் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில், மொத்தம் 5 லட்சம் நாற்காலிகள் திடலில் போடப்பட உள்ளன. அமைச்சர் கே.என்.நேரு, கடந்த சில நாட்களாக மாநாடு நடக்கும் இடத்தில் முகாமிட்டு,பம்பரமாக சுழன்று பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்" ..? சீரியல் முடிஞ்சுது..!! தமிழிசை தாக்கு..!!
மார்ச் 9-ந் தேதி மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. கொடியை ஏற்றி வைத்த பிறகு மாநாட்டு மேடையின் பின்புறம் உள்ள தனியார் தொழிற்பூங்காவில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். மாநாட்டில் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
அதன்பிறகு, மாலையில் மாநாட்டுத் திடலுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை கி.மீ. நீள ‘ரேம்ப்’பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வருகிறார். திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பேசி முடித்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்த மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று மாநாட்டுப் பணிகளை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருச்சி சிறுகனூரில் மார்ச் 9-ந் தேதி மதியம் தேதி மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்க உள்ளது. 5:30 மணிக்கு தமிழக முதல்வர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் கழக கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.
கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை அறிவித்தார். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள் .அதேபோன்று புதிய அறிவிப்புகளோடு சிறந்த மாநாடாக இது அமையும்.
தேர்தல் அறிக்கையில் இருந்து ஏதாவது ஒன்று, இரண்டு அறிவிப்புகளை இங்கு வெளியிடலாம்.
நிதிநிலைக்கு ஏற்ப என்ன செய்ய முடியுமோ அறிவித்துவிட்டு செய்யாமல் இருந்தால் சரியாக இருக்காது. எதை செய்ய முடியுமோ அதை முதலமைச்சர் அறிவிப்பார். இது திமுக மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் எனக்கூறினார்.
இதையும் படிங்க: பப்புவை நம்பி மக்கிப்போன காங்கிரஸ்.. வெட்கமே இல்லையா? அதிமுக விளாசல்..!!