தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் இந்த முறை 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட்கள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத ஒதுக்கீடு என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதமே காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துவிட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை குழு அமைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் தமிழக வருகை தள்ளிப்போய் வருகிறது. கூட்டணி பேச்சு தொடங்காமல் இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: “காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் கொடுத்தால் பாதிப்பு நமக்குத்தான். 2016 தேர்தலில் 41 தொகுதிகள் கொடுத்தோம். ஆனால் 8 இடங்களில் மட்டுமே வென்றனர். அப்போது ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ்தான் காரணம். இந்த முறை அதே தவறை செய்யக்கூடாது. இல்லாவிட்டால் நமக்கே பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

இந்த எச்சரிக்கையால் முதல்வர் ஸ்டாலினும் யோசனையில் ஆழ்ந்துள்ளார். காங்கிரஸ் கோரிக்கைகளுக்கு ஆர்வம் காட்டாமல், தி.மு.க. மற்றொரு பக்கம் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருவனந்தபுரம் வரை சென்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவை தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வந்துள்ளனர்.
தி.மு.க.வின் இந்த அணுகுமுறை கூட்டணி கணக்குகளை மாற்றும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பது தி.மு.க.வுக்கு சவாலாக உள்ளது. 2021 தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதை அதிகரிக்க வேண்டுமா என்பது பெரும் விவாதமாக உள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்படும் இந்த இழுபறி, மற்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் பாதிக்கும். தி.மு.க. தலைமை எப்படி முடிவெடுக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-ஐ வச்சுக்கலாமா வேணாமா? அதிமுகவுக்கு அட்வாண்டேஜா? குழம்பி தவிக்கும் திமுக தலைமை!