2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மாதிரி நடத்தை விதிகளின் கீழ், டிஜிட்டல் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆணையம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் (Deepfakes) தேர்தல் களத்தில் தவறான பிம்பத்தை உருவாக்குவதைத் தடுக்க ஆணையம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமான அல்லது AI மூலம் கையாளப்பட்ட உள்ளடக்கம் குறித்துப் புகார் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், அதில் “செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது” அல்லது “டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது” என்ற வாசகம் தெளிவாக இடம்பெற வேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் தற்போது வரை, விதிமீறலில் ஈடுபட்ட 11,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மீது சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோருதல் போன்ற நடவடிக்கைகள் மாநில தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தை 'அமைதிக் காலம்' என ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126-ன் படி, இந்தக் காலத்தில் தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் என எந்தத் தளத்திலும் தேர்தல் தொடர்பான பிரச்சாரக் காட்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமீறல்களைப் புகாரளிக்க சி-விஜில் (C-Vigil) செயலி ஒரு முக்கியக் கருவியாக மாறியுள்ளது. மார்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை மொத்தம் 3,23,099 புகார்கள் பதிவாகியுள்ளன.
இதில் 96.01% புகார்களுக்கு (3,10,393 புகார்கள்), நிர்ணயிக்கப்பட்ட 100 நிமிட காலக்கெடுவிற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய இணையதள நிறுவனங்களும், ஊடகங்களும் இந்த விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!