சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் அவர், கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள சோர்வை போக்கவும், நிர்வாகிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்தக் கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சமீப காலமாக பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்துள்ள சூழலில், கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார்.
கூட்டத்தில் பேசிய அவர், "பல சோதனைகளை கடந்து வந்த அ.தி.மு.க. இந்த நெருக்கடியையும் கடந்து மீண்டும் எழும். வரவிருக்கும் ஏழு சட்டசபை இடைத்தேர்தல்களில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கட்சியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியும்.
இதையும் படிங்க: எடப்பாடி சொத்துக்கு குறி வைத்த செங்கோட்டையன்... முதலமைச்சர் காதுகளை எட்டப்போகும் முக்கிய விவகாரம்...!

குறிப்பாக கரூர் தொகுதியில் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும். அப்போது கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு மக்கள் மூலமாக பதிலடி கொடுக்க முடியும்" என்று உற்சாகமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், கட்சியின் அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை 25 முதல் 2027 ஏப்ரல் 17 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டங்களுக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகிக்க உள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை அ.தி.மு.க. தனது அரசியல் மறுமலர்ச்சிக்கான முக்கிய வாய்ப்பாகக் கருதி செயல்பட்டு வருவது, பழனிசாமியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் திட்டம் தயார்? எடப்பாடி பழனிசாமியின் புதிய வியூகம்!