புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வட இந்தியா - தென் இந்தியா பிரிவினை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். "நிலைமை இப்போது அப்படி உள்ளது. வட இந்தியா தென் இந்தியா என எப்போது பிரியும் என்று தெரியவில்லை" என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஓட்டுக்காக தேசத்தை கூறுபோட முயல்கிறது திமுக! தேசத்தை இரண்டாக பிளக்கும் நோக்கத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது" என்று தாக்கியுள்ளார்.
மேலும், "இதுநாள் வரை பாரத மக்களை வடக்கு - தெற்கு என பிரித்து, வடமாநிலத்தவர்களை இழிவாக பேசிய திமுக தலைவர்கள், இப்போது ஒரு படி மேலே சென்று பாரத தேசத்தையே இரண்டாக பிளக்கும் நோக்கில் பேசியிருப்பது திமுகவின் பிரிவினைவாத போக்கை பட்டவர்த்தனமாக்கியுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

அமைச்சர் பதவியில் இருந்தபடி இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேசியதால், ராஜகண்ணப்பன் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். "தொடர்ந்து இந்திய ஒற்றுமையை குலைத்து, பிரிவினைவாதத்தை விதைத்து ஓட்டு பிச்சை எடுக்கும் அறிவாலயம் தமிழக மக்களால் வேரோடு பிடுங்கி எறியப்படும் நாள் தொலைவில் இல்லை!" என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட-தென் இடைவெளி, மொழி, கலாச்சார வேறுபாடுகள், நிதி பகிர்வு போன்ற விவகாரங்கள் ஏற்கனவே விவாதத்தில் உள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு பிரிவினை உணர்வுகளை தூண்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சர்ச்சை இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்துகள் ஜனநாயகத்தில் ஏற்புடையதா என்பது இப்போது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: அறிவாலயம் விரைவில் அழியும்!!! இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது! நாகேந்திரன் வார்னிங்!