தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவபதி ஆகியோர் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்தனர்.
ஏற்கனவே அ.தி.மு.க.வை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களும் கட்சி மாறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். அவர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரியவில்சன், வெங்கடரமணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜயை காட்டிலும்! அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பேச்சு!
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆனந்த், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அனைவருக்கும் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படும் என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், தமிழக அரசியலில் மாற்றத்தை மக்கள் விரும்பியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாக கூறினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மக்களுக்கான சேவையை தொடர்ந்து முன்னெடுக்கவே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்திலும் இணைய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அ.தி.மு.க.வின் எதிர்கால அரசியல் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மறுபுறம், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.விலிருந்து மேலும் பலர் தங்கள் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு பதிலளித்த அ.தி.மு.க. தலைவர்கள், கட்சியின் அடித்தளம் வலுவாக இருப்பதாகவும், தனிப்பட்ட சிலர் வெளியேறுவது கட்சியை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறியிருப்பது தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கொள்கை, கத்திரிக்காய் ஒன்னும் இல்ல... தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை..! சிபிஐ முத்தரசன் விமர்சனம்..!!