கரூர் - கோவை சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கரூர் மேற்கு மாநகரத் மண்டல தலைவராகப் பணியாற்றி வந்த பவானி துரைப்பாண்டி என்பவர் திடீரென கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்.பவானியை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அவர், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்திடம், தன்னை நீக்கியதற்கான காரணம் என்ன என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பாக சாலையில் உள்ள கார் முன்பு திடீரென அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க அலுவலக வளாகத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காதுல பூ சுத்துரீங்களா? ஆதவ் பேச்சு ஆச்சரியமா இருக்கு..! தமிழிசை விமர்சனம்..!
போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த பவானி துரைப்பாண்டி, பா.ஜ.க மாவட்டத் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்குச் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய சூழல் இல்லை. கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களாகக் கட்சி வளர்ச்சிக்காக நான் களத்தில் நின்று மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன்.அப்படியிருக்க, எந்தக் காரணமும் இல்லாமல் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்றே தெரியவில்லை. இதுகுறித்து இங்கு வந்துள்ள மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்திடம் கேட்டதற்கும் அவரும் உரிய பதில் அளிக்காமல் மறுக்கின்றார்.
இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் உள்ள மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் முறையிட்டும், அவரிடமிருந்தும் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த அநீதிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் பங்கேற்ற கூட்டத்திலேயே, கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பா.ஜ.க அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அதலபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!