கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வர் பதவியை பிடிப்பதில் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருவதால், ஆட்சியை கைப்பற்றிய மகிழ்ச்சியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதே நேரத்தில், ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி 35 இடங்களுக்கு மட்டுமே சுருங்கியது.
இந்த வெற்றிக்குப் பிறகு யார் முதல்வராக வரப்போகிறார் என்ற கேள்வி தற்போது கேரள அரசியலின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆலப்புழா எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், முதல்வர் பதவியை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட 63 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 47 பேர் தமக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், வி.டி.சதீஷனின் ஆதரவாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். “காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் சதீஷனின் அயராத உழைப்பே. அவர் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. அவரை முதல்வராக்காமல் விட்டால் அது கட்சியின் வரலாற்று தவறாகிவிடும்” என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், முஸ்லீம் லீக் மற்றும் கேரள ஜோசப் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் சதீஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் முதல்வர் தேர்வு மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில், காங்கிரஸ் மேலிடம் சார்பில் சச்சின் பைலட், கே.ஜே.ஜார்ஜ், கன்னையா குமார் மற்றும் இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கேரளா சென்று எம்.எல்.ஏக்களை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதனால், கேரளாவின் அடுத்த முதலமைச்சராக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் மீண்டும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பலி: 26 வயது செவிலியர் உயிரிழப்பு..!!