தமிழகத்தில் நிலவும் அரசியல் தேக்க நிலையை உடைக்க, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இருப்பினும், இந்த முடிவு ஒரு தற்காலிகமான நடவடிக்கை மட்டுமே என்றும், திமுக உடனான தங்களது நீண்டகால உறவு தொடரும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
இடதுசாரி தலைவர்கள் வெளியிட்டுள்ள கஅறிக்கையில் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு அளிக்கிறோம். விஜய் அமைக்கும் புதிய அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை. வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு வழங்குவோம்.
தவெக-விற்கு ஆதரவு அளித்தாலும், மதச்சார்பற்ற கொள்கை மற்றும் மத்திய அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் திமுக-வுடன் இணைந்து பயணிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக திமுக-விடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இதையும் படிங்க: நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்!

புதிய ஆட்சி அமைப்பதில் ஆளுநர் காட்டி வரும் தாமதம் தேவையற்றது எனக் குறிப்பிட்டுள்ள இடதுசாரிகள், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே புதிய அரசு அமையத் தடையாக இருக்க மாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில், இடதுசாரிகளின் இந்த விளக்கம் தவெக கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தாலும், சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (118) எட்ட விஜய்க்கு இடதுசாரிகள் மற்றும் விசிக-வின் இந்த "வெளியிலிருந்து ஆதரவு" எனும் வியூகம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நிலவிய அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!