திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 5 நாட்களுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இத்தண்ணீர் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி பல முக்கிய விஷயங்களை தெரிவித்தார். முதலில் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இது குறித்து நான் ஏற்கனவே முழுமையாக விளக்கம் அளித்துவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமே உள்ளது. இறுதி முடிவை அவர்தான் அறிவிப்பார்” என்று கூறினார்.
அடுத்ததாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாகவும், சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். முதலமைச்சரின் தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தால் ஓரளவு தொகை கிடைத்தாலும், முழுத் தொகை இன்னும் வரவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் தலைமையில் பாமக பொங்கல் விழா!! தைலாபுரம் வராமல் புறக்கணித்த அன்புமணி!

மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை மத்திய அரசு நீக்கியது கண்டனத்திற்குரியது என்றும், ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத கிராமப்புற ஏழைகளுக்கு இத்திட்டம் மிக முக்கியமான வாழ்வாதாரம் என்றும் அவர் வலியுறுத்தினார். 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படாமல் இருப்பது தவறு என்றும், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இறுதியாக அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர் ஐ. பெரியசாமி உணர்ச்சிமிக்க பதிலை அளித்தார். “நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைக்கு சென்று, போராடி, பக்குவப்பட்டுத்தான் இன்று ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளோம்.
பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்கள் தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்த சுணக்கமும், பாதிப்பும் ஏற்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை தீயில் கரைத்து.!!! போகியோடு அனுப்பிச்சிருங்க!! அண்ணாமலை வாழ்த்தால் சர்ச்சை!