மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசியுள்ளார். சமூக வலைதள நேரலையில் பேசிய அவர், தனது அரசியல் பயணத்தை எந்த சக்தியாலும் முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும், அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடுவேன் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
தனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இதன் மூலம் தனது ஆதரவாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்றார். ஆனால், மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருக்கும் வரை தனக்கு எதுவும் ஆகாது என்றும் அவர் கூறினார்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கட்சித் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்த அரசியல் சதிகள் நடைபெறுகின்றன என்றும், ஆனால் திரிணாமுல் தொண்டர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

பாஜகவை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி, “எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது. ஆனால், உங்கள் அரசியல் முடிவைப் பார்க்கும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன். பாஜக வீழ்ச்சியை நேரில் காணும் வரை எனது அரசியல் போராட்டம் ஓயாது” என்று ஆவேசமாக பேசினார்.
மம்தாவின் இந்த கருத்துகள் தேசிய அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கும், அரசியல் சூழ்நிலைக்கும் ஒரே நேரத்தில் பதிலளிக்கும் வகையில் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. இருப்பினும், அவர் முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: வந்தே மாதரத்தை எதிர்க்காதது ஏன்.? அத்துமீறும் மத்திய அரசு... அமைதி காக்கும் தவெக.. சீமான் காட்டம்..!!