இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. கடந்த ஆக.22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில்,அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணுவின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து உறவினர்கள், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துச்சாமி, தங்கம் தென்னரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோரும் மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர் தப்பியோட்டம்...!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், “ மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. கட்சி தலைமைக்கும் நல்லகண்ணுவின் உறவினருக்கும் அவரின் உடல்நிலை குறித்து உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக போராடியவர் தான் நல்லகண்ணு.வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக போராடிய அவர் தற்போது இயற்கையுடன் போராடிக்கொண்டு இருக்கின்றார்” என உருக்கமாக பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிர்ச்சி... சுக்கு நூறாக விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம்... 7 பேர் உயிரிழப்பு...!